புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்தப்பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதிலிருந்து மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

 


சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து இடைவிடாது மழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் மிக பலத்த மழை பெய்தது.

சென்னை நகரில் அதிகபட்சமாக சாந்தோம் பகுதியில் 23 செ.மீட்டர் மழை பெய்தது. இதேபோல பல இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது.

இதேபோல சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது.

சென்னை நகருக்குள் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

2015-ம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதிப்பை உருவாக்கியது. அதை நினைவுபடுத்தும் வகையில் நேற்று நகரின் வெள்ள நிலைமை இருந்தது.
 

இரவில் வெள்ளம் சற்று வடிந்திருந்த நிலையில் இன்று காலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. இதனால் மீண்டும் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

 

 


நகரை சுற்றியுள்ள புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி ஆகியவை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாகவும் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. எனவே வெள்ள நிலைமை இதைவிட மோசமாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இவ்வளவு நாளும் வளிமண்டல சுழற்சி காரணமாகத்தான் மழை பெய்து வந்தது.

இந்தநிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக இருப்பதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானால் அதன் மூலம் மிக அதிக மழை பெய்வது வழக்கம். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவாகி புயலாக மாறுவதும் உண்டு. அவ்வாறு மாறினால் பயங்கர சூறைக்காற்றுடன் மழை பெய்யும்.

இப்போது தென்கிழக்கு வங்கக்கடலில் அதிதீவிர காற்றழுத்தப்பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மிக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் உருவாகும் என்று வானிலை இலாகா கூறி இருக்கிறது. அதன்படி நாளை (9-ந்தேதி) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்.

அதன் பின்னர் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து வரும். வருகிற 11-ந் தேதி சென்னையை அது நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும்போது நகரில் மிக அதிக மழை பெய்யும்.

எனவே சென்னை நகரம் மீண்டும் வெள்ளக்காடாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா கூறி இருக்கிறது.
 

இதன் காரணமாக சென்னையில் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்துக்கு இடைவிடாது மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.