நவம்பர் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். எனினும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

 

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 8ம் தேதிவரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

 

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 8ம் தேதி வரை மழை நீடிக்கும்.

 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒருசில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 13 செமீ மழை பெய்துள்ளது. அம்பாசமுத்திரம் 9 செமீ, மகாபலிபுரம், மண்டபம், பாளையங்கோட்டையில் தலா 8 செமீ மழை பதிவாகி உள்ளது.