இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொவிட்: இன்றைய T20 போட்டி திடீர் ஒத்திவைப்பு!

இந்திய கிரிக்கெட் வீரருக்கு கொவிட்: இன்றைய T20 போட்டி திடீர் ஒத்திவைப்பு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த  இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளைவரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணிவீரர் க்ருணல் பாண்ட்யாவுக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து, இவ்வாறு போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த இந்திய அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் நாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவியபோது, தற்போதை நிலைமைக்கு மத்தியில் நாளை(28) போட்டியை நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தார்.

தற்போது, இந்திய அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரி்சோதனைகைளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கை மற்றும் இந்திய அணிகள் நேற்றுமுன்தினம் (26) மோதியிருந்த நிலையில், இதனால் இலங்கை வீரர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் நிலவுகிறதா என நாம் அவரிடம் வினவியபோது, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு என்டிஜன் பரிசோதனை முன்னெடுத்ததாகவும், அதன்மூலம் இலங்கை வீரர்கள் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும்,  இன்று (27) முன்னெடுக்கப்படவுள்ள பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் சில வீரர்களுக்கு தொற்று உறுதியானால், போட்டியை நாளைய தினம் நடத்துவது தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.