நல்லூர் ஆலய திருவிழா தொடர்பில் வெளியான விசேட தகவல்!

நல்லூர் ஆலய திருவிழா தொடர்பில் வெளியான விசேட தகவல்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகுமென யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து. ஈசன் தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் உற்சவம் இடம்பெறுமென்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தயாரென ஆலய நிர்வாகத்தினர் எமக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனால் தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளுக்கமைய மஹோற்சவத்தினை நடாத்த எமது சுகாதார வைத்திய அதிகாரி சில விடயங்களை பரிந்துரை செய்துள்ளார்.

அவரால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளாக,

ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம் செல்ல முடியும்.

மஹோற்சவ காலப் பகுதியில் தூக்குக்காவடி, காவடி, அங்கப் பிரதட்சணை, அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றவற்றிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் இடம்பெறும் உற்சவ நிகழ்வுகள் தொடர்பில் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்தும்.

எனினும் உற்சவகாலத்தில் ஆலயத்திற்கு வெளியே இடம்பெறும் செயற்பாடுகளுக்கு யாழ். மாநகர சபையும், பாதுகாப்புப் பிரிவினருமே பொறுப்பாளிகள்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளை மீறுவதற்கான அதிகாரம் எங்களிடமில்லை. தற்போதுள்ள சூழலில் சுகாதார நடைமுறைகளை நாங்கள் அனைவரும் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.

ஆலய உற்சவம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் குறித்த காலப் பகுதிக்குள் ஏதாவது தளர்வுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.