ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய குசல் ஜனித் பெரேரா!
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கை வீரர்கள் சிலர் இரவு நேரத்தில் ´´டரம்´´ பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் இத்தருணத்தில் எதையும் கூற விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இணையவழியில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
போட்டி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ள சந்தர்ப்பம் ஆகையினால் அது தொடர்பில் கதைக்க விருப்பமில்லை எனவும் இதன் காரணமாக குறித்த வீரர்களுக்கு போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அது போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய வீரர்களுடன் நாளை (29) போட்டியை எதிர்கொள்ள நேர்ந்தால் குறைந்த அனுபவம் உள்ள வீரர்களுடன் உலகின் சிறந்த அணியுடன் விளையாடுவது எளிதல்ல என்றும் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"நாம் தோல்வி அடையும் விதம் குறித்து ரசிகர்கள் கவலையில் உள்ளதை நான் அறிவேன். எனினும் எமக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்ந நிலையிலும் வாழ்த்தப்படுவதில் மகிழ்ச்சி. அவர்களின் எதிர்ப்பார்ப்பை நாம் வீணடித்து உள்ளோம். இதற்காக எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பில் உண்மையில் தலைவர் என்ற முறையில் நான் மன்னிப்பை கோருகின்றேன். இவ்வாறான ரசிகர்களை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை எல்லாம் திருத்திக் கொண்டு போட்டியில் வெற்றிப்பெறுவதுதான் எனது எதிர்ப்பார்ப்பு." என்றார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (29) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.