பேருந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு: நிர்க்கதியான பொதுமக்கள்

பேருந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு: நிர்க்கதியான பொதுமக்கள்

ஸ்ரீலங்கா போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்களால் வேலைநிறுத்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா சாலையில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு முறையற்ற வகையில், பழிவாங்கும் விதமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 5.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 10 மணிவரை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் சாலையின் முகாமையாளர்,தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆகியோர் ஊழியர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததுடன் சில உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. குறித்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.