யாரை திருப்திப்படுத்துவதற்காக ரிஷாட்டை கைது செய்தீர்கள்- போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது எமது தலமையை விடுதலை செய்?, ரிஷாட்டை ஏன் கைது செய்தாய்? காரணத்தை வெளிப்படுத்து, அரசே ரிஷாட்டின் கைது யாரை திருப்திப்படுத்த, ரிஷாட்டை விடுதலை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு சமூக இடைவெளிகளைப் பேணி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
புனித நோன்பு காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்துள்ளமை கவலையளிப்பதுடன், எந்தவித முன்னறிவித்தலுமின்றி கைது செய்துள்ளமை மனவேதனையளிக்கின்றது. நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு விடுதலை செய்யுமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.