கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் உடனடியாக முன்னெடுத்த நடவடிக்கை!

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் உடனடியாக முன்னெடுத்த நடவடிக்கை!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டில் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மான் இறைச்சி 2 கிலோகிராம், தேவாங்கு இறைச்சி 1 கிலோகிராம் மற்றும் 2 கத்திகள் என்பனவும் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.எம்.ஐ.கே. திஸாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மூதூர் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.