இராணுவத்தின் திடீர் சோதனையில் சிக்கிய இரு இளைஞர்கள்!

இராணுவத்தின் திடீர் சோதனையில் சிக்கிய இரு இளைஞர்கள்!

கொழும்பிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்றிலிருந்து ஐஸ் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்தேகநபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த வானின் சாரதியான கொழும்பு, வெல்லமபிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞனும் மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமாக காணப்பட்ட இந்த வான் கிண்ணியா, கண்டலடியூற்று இராணுவ முகாம் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் வைத்து சோதனையிட்ட போது வானுக்குள் கோழிக் குஞ்சுகளை ஏற்றிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் பக்கெட் ஒன்றும் 1 கிராம் பக்கெட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கிறனர். மேலும் கர்ப்பத் தடை மாத்திரைகள் 5 ஐ கொண்ட 130 கார்ட்டுகளும் வெளிநாட்டு சிகரெட் பக்கெட்டுகள் 5 உம் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வானில் போதைப்பொருட்களுடன் வந்த நபரொருவர் கிண்ணியாவில் இறங்கியுள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருந்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.