
அமெரிக்க தலைமையக கட்டடத் தொகுதி வளாகத்தில் தாக்குதல் - ஒருவர் பலி
அமெரிக்க தலைமையக கட்டடத் தொகுதி வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில், காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.
மற்றுமொரு காவல்துறை அதிகாரி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வொஷிங்ரனில் உள்ள தலைமையக கட்டடத் தொகுதி வளாகத்திலுள்ள பாதுகாப்பு தடுப்பில், மகிழுந்து ஒன்று நேற்று மோதிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த மகிழுந்திலிருந்து இறங்கிய சாரதி, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது, வில்லியம் ஈவன்ஸ் (William Evans) என்ற காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு காவல்துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியவர், இந்தியானா (Indiana) மாநிலத்தை சேர்ந்த நோஹா க்றீன் (Noah Green) என்ற 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தலைமையக கட்டடத் தொகுதி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது