பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 14,000 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10,000 பேருக்கு இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் நிரந்தரமாக இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவர்களது பயிற்சிக்காலம் நிறைவுபெற்றுள்ளதை அடுத்து இந்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று (22) முதல் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு முன்னெடுக்க முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த இளம் சமூகத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய வைப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் அரசியலைக் கருத்திற்கொள்ளாமல் படிப்பை மாத்திரம் அடிப்படைத் தகைமையாகக் கருதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியலை https://www.pubad.gov.lk/ என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.