யாழ். பல்கலை மாணவன் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா

யாழ். பல்கலை மாணவன் உட்பட வடக்கில் 13 பேருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,

இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 248 பேரின் மாதிரிகளும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 410 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இவர்களில் 13 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் யாழ். மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 5 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனுக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டு கடை உரிமையாளர் கடந்த வாரம் கோவிட் -19 நோயாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்துள்ளார்