
இயற்கையாகவே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தை!
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தை, இயற்கையாகவே கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் பிறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் ஜெர்மனியின் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மொடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியிருக்கிறார்.
தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளநிலையில் அக்குழந்தையை பரிசோதித்தவைத்தியர்கள், அக்குழந்தையின் உடலில் எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்பு சக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என்றும் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த எதிர்ப்பு சக்தி குழந்தையின் உடலில் எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்