மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்!

மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம்!

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேலும் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்.

மேலும் 5 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் நுண்கடன் நிறுவனத்தின் பணியாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இருவர் மாந்தை மேற்கு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல் நிலை தொடர்பாளராகவும், ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கடமையாற்றியவரோடு நெருங்கி பழகியவராகவும், மேலும் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஒருவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் முசலி பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 83 பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது எவருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் 288 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 11 ஆயிரத்து 230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாதம் 683 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண தர பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளது. முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த மூன்று மாணவர்கள் சுகாதார பிரிவின் போக்கு வரத்து வசதி ஊடாக பரீட்சையில் தோற்றி இன்றைய தினம் பரீட்சையை நிறைவு செய்துள்ளனர்.

நாளை மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம் பெற உள்ள மஹா சிவராத்திரி நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெறவுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்எனவும் அவர் மேலும் தெரிவித்தார்