தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம் மற்றும் கைத்தொழில் பிணக்குகள் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம் மற்றும் கைத்தொழில் பிணக்குகள் சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டம் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சட்டங்களின் கீழ் ஊழியர்களுக்கு சார்பாக கட்டளைகளை பிறப்பிக்கும் போது குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்காக ஒரு சில தொழில் வழங்குனர்கள், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 15 முதல் 20 வருடங்கள் செல்வதாகவும், குறித்த காலப்பகுதியில் தொழில் வழங்குனர்களின் இறப்பு, வெளிநாடுகளுக்குச் செல்லல், நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை மற்றும் நிறுனத்தை மத்தியஸ்தம் செய்தல் போன்ற காரணங்களால் ஊழியர்கள் எதிர்பார்க்கின்ற நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு இயலாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே கைத்தொழில் தகராறு தீர்ப்புக்கள் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொழில் வழங்குனர் நீதிமன்ற நடவடிக்கைகக்கு செல்லும் போது பிணைத் தொகையை வைப்பு செய்ததன் பின்னர் மாத்திரம் நீதிமன்ற செயன்முறையை ஆரம்பிக்கும் வகையில் குறித்த சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது