சற்று முன்னர் வெளியான செய்தி...காரைநகர் மற்றும் ஊர்காவல்துறை உட்பட யாழ்.மாவட்டத்தில் 22பேருக்கு கொரோனா உறுதி!

சற்று முன்னர் வெளியான செய்தி...காரைநகர் மற்றும் ஊர்காவல்துறை உட்பட யாழ்.மாவட்டத்தில் 22பேருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணத்தில் இன்று மட்டும் 22 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 8 பேர் காரைநகர் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் காப்பாளர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 387 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 382 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டவர்.

யாழ்.மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையைச் சேர்ந்த 90 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் அடங்குகின்றனர்.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தபட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.