இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்

இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும் - வைத்தியர் ஹேமந்த ஹேரத்

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் இரண்டாவது முறையாக தடுப்பூசியை செலுத்துவதற்காக மாற்று வழிகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்தில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இலங்கை பதிவு செய்திருந்த வகையில் தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மீதமுள்ள தடுப்பூசிகள் தற்போது சுகாதார தரப்பின் வசம் உள்ளதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இரண்டாவது முறையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் குறித்த நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுமாயின் அதே தயாரிப்பை வேறு வழிகளில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இரண்டாவது தடுப்பூசி செலுத்துவதில் பிரச்சினை ஏற்படாதென தாம் எதிர்பார்ப்பதாகவும் இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கும் காலம் வரும் போது தடையின்றி தடுப்பூசிகள் கிடைக்குமென நம்புவதாகவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.