நாட்டில் கொரோனா மரணங்கள் 502 ஆக பதிவு

நாட்டில் கொரோனா மரணங்கள் 502 ஆக பதிவு

நாட்டில் கொவிட்-19 காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவானமையை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்லேகல பகுதியை 74 வயதான ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட குருதி கசிவு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் நுகேகொடை பகுதியை சேர்ந்த 82 வயதான ஆணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமையை அடுத்து தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மரணித்தார்.

கொவிட் தொற்றுறுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் பரவர்தனஓயா பகுதியை சேர்ந்த 72 வயதான ஆணொருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று மரணித்தார்.

புற்று நோய் மற்றும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் மாத்தறை பகுதியை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மரணித்தார்.

கொவிட் தொற்று மற்றும் தீவிர இதயநோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கன்னத்தொட்ட பகுதியை சேர்ந்த 67 வயதான ஆணொருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மரணித்தார்.

கன்னத்தொட்ட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் நியூமோனியா நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.