சிவராத்திரி விரத ஏற்பாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதியுதவி
மஹா சிவராத்திரி விரதத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில், பிரதமரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிவராத்திரி விரத நிகழ்வுகளை இந்து ஆலயங்களில் சிறப்புற நடத்த ஊக்கம் நல்குமாறும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, இலங்கையில் சைவத் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை மையப்படுத்தி, விசேட வழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
அதன்போது சைவ சிறார்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவராத்திரி விரதத்தின் பெருமையை உணர்ந்து வழிபாடுகளில் ஈடுபடவும், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
இந்நாளில், இந்து பக்தர்கள் மஹா சிவராத்திரி நோன்பினை பக்திபூர்வமாக அனுஷ்டித்து தெய்வீக அருள் ஒளி எங்கும் நிறைய வழிபாட்டில் ஈடுபடுவர்.
மஹா சிவராத்திரி விரதத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பிரதேச செயலகங்களூடாக, தெரிவுசெய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.