
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் ரூ1230; வர்த்தமானி விரைவில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 2, 3 நாட்களில் வெளியாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானியை அமுலாக்காத நிறுவனங்களுக்கு எதிராக தொழில் திணைக்களத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னதாக அடிப்படை சம்பளம் - 700 ரூபாய் வழங்கப்பட்டது
அத்துடன் மேலதிக கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் கொடுப்பனவாக 161 ரூபாவும் வழங்கப்பட்டது.
இதன்படி நாளாந்த வேதனமாக 911 ரூபாய் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், புதிய தீர்மானத்தின்படி,
நாளாந்த வேதனமாக 900 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் கொடுப்பனவு 230 ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும்
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு நாளாந்தம் 1,230 ரூபாவாக வேதனம் அதிகரிக்கும்
முன்னரை விடவும் நாளாந்தம் 319 ரூபாய் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த வேதனத்தில் இது 35% அதிகரிப்பாகும்.