
வடக்கில் மேலும் அதிகரித்தது கொவிட் தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கின் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 244 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவர்களில் மூவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்.
சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் இரண்டு வாரம் சுயதனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறே பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு இன்றைய பரிசோதனையில் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மல்லாவியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பியவர்கள்.
அந்த இறுதிச் சடங்கில் பங்குபற்றிய சிலருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இவர்கள் மூவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 241 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.