கைவிடப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்பு

கைவிடப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்பு

கடந்த ஆட்சிக்காலத்தில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த ஆட்சிக்காலத்தின் போது கைவிடப்பட்டதாக அதிகாரிகள் பிரதமரிடத்தில் சுட்டிக்காட்டியதற்கு அமைவாக, அவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாகவும் அவரது ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.