விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்- முறியடிக்கப்பட்ட நடவடிக்கை!
பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கழிவுத் தேயிலை தூள் பைகளை பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றிற்கு கொண்டு சென்று பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.