சுமந்திரனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிஸ் குழு!

சுமந்திரனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிஸ் குழு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சுமந்திரன் தனது முகநூல்ப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் மக்களின் கோரிக்கைகள், உரிமைகள் என்பவற்றிற்கு ஐக்கிய நாடுகள் சபை செவிசாய்க்க வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி கடந்த 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சட்டத்தை மீறி பேரணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பலரிடம் இந்த பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்று கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.