தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவதற்கான இறுதித் தீர்மானம் விரைவில்

தமிழ் தேசிய பேரவையை உருவாக்குவதற்கான இறுதித் தீர்மானம் விரைவில்

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவையை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்க கூடிய 10 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்த அதேவேளை கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டிருக்கவில்லை என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வந்திருந்த முதலாவது வரைவு தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று கலந்துரையாடப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களினுடைய அரசியல் கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இந்த முதலாவது வரைபில் சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை.

அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற விடயமாக உள்ளது.

ஆகவே வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை

தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.

ஆனால் அந்த முதலாவது வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே 26ஆம் திகதி அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி தமிழ் தேசிய பேரவை உருவாக்குவது குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.