மாகாண சபையை பலப்படுத்த கோரும் டக்ளஸ்

மாகாண சபையை பலப்படுத்த கோரும் டக்ளஸ்

மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நேற்று கையளிக்கப்பட்ட பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகளை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் தலைவர் றொமேஸ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினரிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை, மாகாணசபையை மேலும் வலுப்படுத்தும் ஏற்பாடுகளும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையே நிபுணர் குழுவிற்கு வழங்கியுள்ள தமது பரிந்துரையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.