கொவிட் கட்டுப்பாடுகளை மீறி பயணிகளை ஏற்றும் பேருந்துகள்; பயணிகள் சங்கம் குற்றச்சாட்டு
கொவிட் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என பயணிகள் தொடர்ந்தும் குற்றம் சுமத்துகின்றனர்.
பேருந்து பயணிகள் சங்கத்தின் இணைப்பாளர் விமுக்தி துஷான்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் எமது செய்தி சேவை வினவியபோது கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, காலை வேளைகளில் மாத்திரமே குறிப்பிட்ட எண்ணிக்கை விடவும் அதிகளவான பயணிகள் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுவதாக குறிப்பிட்டார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
50 க்கும் மேற்பட்ட பேருந்து நடத்துனர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதால் பல பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
எனவே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
இதேநேரம் குறிப்பிட்ட அளவான எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்வதை தவிர்ப்பதற்கு நேர அட்டவணையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என கெமுன விஜேரத்ன தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் எமது செய்திச் சேவை வினவியது.
இதன்போது பதிலளித்த அவர், அதிகளவான பயணிகளை ஏற்றிச்செல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான பயணிகளை ஏற்றிச் சென்ற சுமார் 90 பேருந்துகளின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.