
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு
இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளான கனடா , ஜெர்மனி , வட மசிடோனியா , மொன்டனீக்ரோ , மலாவி , மற்றும் ஐக்கிய இராச்சியம் சார்பிலான அறிக்கை
இலங்கை மக்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்ளும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் , இலங்கையில் பொறுப்புடைமை , நல்லிணக்கம் , உள்ளடக்கமான சமாதானத்திற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்ட விரும்புகின்றது .
உட்கட்டமைப்பு வசதிகளை மீளக்கட்டியெழுப்பல் , கண்ணிவெடி அகற்றல் , நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் என்பவற்றில் இலங்கை அரசாங்கம் எட்டியுள்ள தேர்ச்சியை நாம் அங்கீகரிப்பதுடன் , வரவேற்கின்றோம் .
எவ்வாறாயினும் , யுத்தத்தின் தீங்குவிளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும் , நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பது தெளிவாகின்றது .
இலங்கையில் மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான அறிக்கை குறித்து , ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இந்த மாதத்தில் கவனம் செலுத்தும் .
கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடனும் , ஆக்கப்பூர்வமாகவும் பணியாற்றியமை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளுக்கு முக்கியமானதாக இருந்தது .
இதன் விளைவாக , பேரவைக்கு தயாராவதில் இலங்கை அரசாங்கத்துடன் நாம் ஈடுபட்டுள்ளோம் .
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை அடையாளப்படுத்துவதற்கான தொடரும் முக்கியத்துவத்தினை இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் மீளவலியுறுத்துகின்றன .
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவாறு , இலங்கையில் நல்லிணக்கம் , பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசிக்கின்றன .