
சட்டவிரோதமாக மணல் ஏற்றிய கும்பல் மடக்கிப்பிடிப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய கும்பலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனேரி மற்றும் புணாணை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது ஓட்டமாவடி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் வாகனேரி மற்றும் புணாணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு கனரக இயந்திரங்கள் மற்றும் இரண்டு உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.