கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் முதல் ஆரம்பம்..!

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் முதல் ஆரம்பம்..!

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டதன் பின்னர், நாளை மறுதினம் 29 ஆம் திகதி, இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, தேசிய வைத்தியசாலை, கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகள், ஹோமாகமை, முல்லேரியா மற்றும் ஐ.டி.எச் முதலான வைத்தியசாலைகள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த வைத்தியசாலைகளில் உள்ள முழுமையான பணிக்குழாமில், நாளொன்றுக்கு 25 சதவீதமளவில், நான்கு நாட்களில் அவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறாக பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு இணையாக, மத்திய ஒளடத களஞ்சியத்தின், நாடுமுழுவதும் உள்ள 26 பிரதேச களஞ்சியங்களுக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.

தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக அடுத்த வாரம் முதல், ஏனைய வைத்தியசாலைகளிலும், பணிக்குழாமினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.