மட்டக்களப்பில் இடம்பெற்ற கோரம்! நீதவானின் உத்தரவையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரி

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோரம்! நீதவானின் உத்தரவையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த அதிகாரி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பார ஊர்தியில் மண் ஏற்றுவதற்காக தும்பங்கேணி பிரதான வீதியில் பணித்த வாகனம் வீதியின் அருகில் நின்ற மரத்தின் மீது மோதியுள்ளது. இதனால் மரக்கிளை ஒன்று பார ஊர்தியின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாரதியின் நெஞ்சுப் பகுதியில் மிகவும் பலமாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துவர் கிறிஸ்டியன் வீதி பெரியகல்லாறு- 2 எனும் முகவரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 36 வயதுடைய கீர்த்தி டானியல் ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரேதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.