நீதிமன்றம், சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...!
நீதிமன்றம், சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று தாம் விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய நீதிமன்ற வளாகம் 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான செலவு 16 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவாகும்.
இதன் பின்னர் கருத்துரைத்த போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முன்னணியில் இருக்கின்றது.
நீதிமன்றம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை தேவையாகும்.
அதை நோக்கிய ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
வரலாற்றில் ஒவ்வொரு முறையும் தாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பணியாற்றினோம்.
தனிப்பட்ட குறுக்கீடு மூலம் தாங்கள் ஒருபோதும் சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை.
எனவே, மக்களின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு திருத்தத்திற்கு தாங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் இன்னும் காலாவதியான சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்த அழுத்தத்திலிருந்து மக்களை விடுவிப்பது எமது பொறுப்பாகும்.
தற்போதுள்ள பொதுமக்களின் பிரச்சினைகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவை சமரசக் குழுவால் தீர்க்கப்பட முடியுமானால் அவை அதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.
மேலும், வழக்கு விசாரணைகளின் தாமதம் மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கு பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னதாகவே இறக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்த சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக, இன்று தொடங்கும் நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சியின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும், பிரஜைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் எப்போதும் விரும்புகின்றோம்.
மேலும், நீதித்துறையில் பணியாற்றும் பிரஜைகளுக்கு அந்த நிறுவனங்கள் குறித்த அச்சம் நீங்க வேண்டும்.
ஒரு நாட்டிற்கான தேசிய நலனை, ஒரு சட்டத்தை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளோம்.
அதற்கு பொருத்தமான சட்ட கட்டமைப்பை நாட்டின் மத்தியில் புதுப்பிப்பதற்கு இந்த துறையைச் சேர்ந்த அனைவரதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.