
வடக்கில் திருமண மண்டபங்கள் - பொதுச் சந்தைகளை திறக்க அனுமதி
எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து வடக்கு மாகாணத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த மாதம் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக பொதுச் சந்தைகள் மற்றும் திருமண மண்டபங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டது.
இந்நிலையில் நேற்றுக் காலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாகாண பிரதம செயலாளர், அரச அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.