கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்..!

கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்..!

நாட்டில் மேலும் மூன்று கொவிட்19 மரணங்கள் நேற்று பதிவாகின.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆண் ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு கடந்த 8ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு - 14 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டார்.

அவர், அதன் பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதி மரணித்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் புற்றுநோய் மற்றும் கொவிட் நிமோனியா நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 09ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா மற்றும் இருதய நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.