
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை..!!
கொவிட்-19 தொற்றுறுதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவும், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமது ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து தாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரம், தம்முடன் கடந்த 10 நாட்களுக்குள் தொடர்பை பேணியவர்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் கோரியிருந்தார்.
அதேநேரம் ரவுப் ஹக்கீம் கடந்த 5ம் திகதி நாடாளுமன்றிற்கு சென்றிருந்தநிலையில், அவருடன் தொடர்பு கொண்டவர்களை சீ.சீ.டி.வி மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பின் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை பீ.சீ.ஆர். பரிசோதனை செய்துக் கொள்ளும்படியும், தனிமைப்படுமாறும் அறிவுறத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் எதிர்வரும் வாரங்களின் வழமைப்போலவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபையில் 300 பேருக்கு கொவிட் தொற்றுக்கான ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.