தொழில் முனைவோருக்கான அறிவினை வழங்க திட்டம்..!!

தொழில் முனைவோருக்கான அறிவினை வழங்க திட்டம்..!!

கிராம மட்டத்தில் புதிய தொழிலதிபர்களை உருவாக்கும் போது புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவினை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு பொருளதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இளைஞர்களுக்கிடையில் வேலையில்லா பிரச்சினை அதிகளவில் காணப்படுகின்றன.

அனைவருக்கும் தொழிற்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், தொழிற்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு சந்தைக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை மேம்படுத்தல், தொழிற்கல்வி நடவடிக்கைகளை பிரதேச ரீதியாக விரிவுபடுத்தல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு தொழில்நுட்ப மற்றும் உயர் தொழிற்கல்வி வழங்குவது தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கொரு தொழிலதிபர் என்ற ரீதியில் 14 ஆயிரத்து 22 புதிய தொழிலதிபர்களை உருவாக்குவதற்கு இந்தமுறை பாதீட்டில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்முனைவோர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியுள்ளது.

இதன் கீழ் பாரம்பரிய கிராமங்கள் ஒன்றிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றும் செயற்படுத்தப்படும் எனவும் பொருளதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.