நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..!

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்..!

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பெற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தவிசாளர் வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ப.மயூரனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

20 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நல்லூர் பிரதேச சபையின் 8 உறுப்பினர்கள் கு.மதுசுதனுக்கு ஆதரவாகவும்,

10 உறுப்பினகள் ப.மயூரனும் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் என 8 உறுப்பினர்கள் கு.மதுசுதனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள் , சுயேட்சை குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ப.மயூரனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் இரண்டுபேர் சபை அமர்பில் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்

இதனால் 2 மேலதிக வாக்குகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி நல்லூர் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தமது பதவியை இழக்க நேரிட்டது.