மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆக உயர்வு!

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 73 ஆக உயர்வு!

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 17) வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவரும் சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேரும் அடங்குகின்றனர்  என்று அவர் குறிப்பிட்டார்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 418 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய 415 பேருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த 9ஆம் திகதி புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.


அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


அதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.


மறுநாள் அவரது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.


அத்துடன், 7ஆவது நாளான இன்று மாலை வெளியாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூட பரிசோதனையில் சுன்னாகம் பொதுச் சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியினால் இன்று மாலை வரை 73பேர் பாதிக்கபட்டனர்.