
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தனது பதவியை இழந்தார்...!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்து பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவியை இழக்க நேர்ந்துள்ளது.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்த அதேவேளை 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு உறுப்பினர் என 12 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
இரண்டு தடவைகள் நல்லூர் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளதால் தவிசாளரும் தனது பதவியை இழக்க நேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தது.