
மருதனார்மடம் கொத்தணியில் மூன்று நாள்களுக்குள் 58 கொரோனா தொற்றாளர்கள்
மருதனார்மடம் பொதுச்சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 6 பேருக்கு இன்று மாலை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த ஆறு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.
மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய 100 பேரின் மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக
மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன்அறிக்கை நேற்று மாலை வெளியானது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி ஓட்டோ தரிப்பிடத்தில் சாரதிகளிடம் மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் ஓட்டோ சாரதியாகவும் உள்ள 38 வயது குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
மறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்பின்னர் ஒரேநாளில் 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் கடந்த 12 ஆம் திகதி முதல் இன்று வரை 58 பேர் மருதனார்மடம் கொரோனா கொத்தணி தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.