யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் இன்று (டிசெ. 14) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இன்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை நபர், மருதனார்மடம் சந்தையில் முதலாவது தொற்றாளருடன் வியாபாரத்தில் ஈடுபடுபவர்.
அத்துடன், இன்று அடையாளம் காணப்பட்டவரின் மச்சான் உறவுமுறை வியாபாரியின் மாதிரி அநுராதபுரம் வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும் அதன் முடிவு கிடைக்கவில்லை என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.

முதலாவது தொற்றாளர் வசிக்கும் கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த  150 பேரின் மாதிரிகள்  இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதன் அறிக்கை இன்று இரவு 8.45 மணிக்கு வெளியாகியது.


சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை  மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றிரவு கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
மறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன், மூன்றாவது நாளான நேற்று மேலும் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் மூவர் ஏழாலையும் இருவர் இணுவிலையும் சேர்ந்தவர்கள்.