மட்டக்களப்பில் இளம் மனைவி கழுத்து நெரித்துக் கொலை! கணவன் கைது

மட்டக்களப்பில் இளம் மனைவி கழுத்து நெரித்துக் கொலை! கணவன் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஐயங்கேணிக் கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஐயங்கேணிக் கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் ஷியாமியா (வயது 24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 9 தினங்களுக்கு முன்னரே இரண்டாவது திருமணம் முடித்த நபரொருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபராக அப்பெண்ணின் கணவர் நவாஸ் முஹம்மத் சபீக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு ஊறுகொடவத்தைய பிறப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர் ஏறாவூரில் ஏற்கெனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகிய நிலையில் அப்பெண்ணை விவாகரித்துச் செய்து கடந்த 9 தினங்களுக்கு முன்னர் தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணை மணமுடித்திருக்கின்றார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தாக்கப்பட்டு வயர் மூலம் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை பெண்ணின் சடலம் பிரேத கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு சந்தேக நபரான கணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.