இன்றிரவு நிகழ்ந்த துயரம் -பளை வைத்தியசாலையில் மக்கள் குழப்பம்

இன்றிரவு நிகழ்ந்த துயரம் -பளை வைத்தியசாலையில் மக்கள் குழப்பம்

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மஞ்சள் கோட்டில் மிதிவண்டியில் பயணித்த முதியவரை அரச பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து பளை வைத்தியசாலையில் சற்று முன்னர் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இத்தாவில் பகுதியைச் சேர்ந்த பொன்னையா சிவராசா (வயது 68) என்பவர் இன்று இரவு 7.30 மணியளவில் இத்தாவில் பகுதியில் வீதியில் மஞ்சள் கடவை ஊடாக மிதிவண்டியில் வீதியைக் கடந்துள்ளார். அவ்வேளை திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேருந்து அவரை மோதியுள்ளது.

சம்பவத்தை அடுத்து அவரை மக்கள் உடனடியாக வாகனம் ஒன்றில் பளை ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

அவரைப் பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் அங்கு கூடியவர்கள் சிலர் மருத்துவர்கள் மருத்துவம் பார்க்காமலேயே அவர் உயிரிழந்ததாக எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் இதனால் அங்கு குழப்ப நிலை நிலவியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்