ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து விசாரணை
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட விதம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை தொற்று நோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விசாரணைகளின் ஊடாக வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த நபரொவரின் ஊடாக இந்த தொற்று மீண்டும் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இந்த கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சீதுவ ராமதா ஹோட்டலில் தங்கியிருந்த யுக்ரேன் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானப் பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டது.
ஹோட்டல் ஊழியர்களுக்கும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்தது. அதனூடாக இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவும் கருத்து வெளியிட்டார்
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய 1500 பேரில் 400 பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று ஏற்படவில்லை.
இவ்வாறு கொவிட் தொற்று ஏற்படாதவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது
குறித்த தரப்பினருக்கு ஏற்கனவே கொவிட் தொற்று இருந்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகவே இந்த அன்ரிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் 8 வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் ஒருவர் மாத்திரமே இந்த ஆண்டு வெளிநாட்டிற்குச் சென்று நாடு திரும்பியிருந்தார்.
இவ்வாறு நாடு திரும்பியவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உரிய சுகாதார வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன
இதேவேளை, இந்தியாவின் விசாகப்பட்டினம் பகுதியிலுள்ள பிரென்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 500 இலங்கையர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்
விசாகப்பட்டினத்தில் பணிபுரியும் இலங்கையர்களில் 341 பேர் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். அவர்களில் 10 பேருக்கு மாத்திரமே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த 341 பேரும் இலங்கையிலுள்ள எந்தவொரு பிரென்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலைக்கும் செல்லவில்லை எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.