ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கில் ஏற்படப்போகும் மாற்றம்!
வடக்கு கிழக்கில் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இத்திட்டங்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்றையதினம் கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே உள்ளன என்றார்.
இதேவேளை 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர்,
தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கிகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.