யாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் - மூவரைக் காணவில்லை - 1589 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் - மூவரைக் காணவில்லை - 1589 பேர் பாதிப்பு

வங்காள விரிகுடாவில் உருவான புரெவிப் புயல் இன்று பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத் தாண்டி முன்னேறி மன்னாரைக் கடந்து தமிழகத் திசையை நோக்கி நகர்ந்தது.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 459 குடும்பங்களை சேர்ந்த 1589 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு வேலணை பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர் எனவும் , கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.