தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனா இல்லை!

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையி்ல் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த அருளையா ஜனகராசா (வயது- 60) என்ற வயோதிபரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு 20 சதவீதமாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.