அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

அமெரிக்காவையே போர்க்களமாக்கியிருக்கிறது ஒற்றை மனிதரின் மரணம்… யாரிந்த ஜோர்ஜ் பிலோய்ட்?

உலகின் சிறுபான்மை இனங்கள் யாவுமே எதோ ஓர் வகையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கும் நிலையில், கறுப்பினத்தவர்கள் இவ் அடக்கு முறைகளால் அதிகமான நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள்.

இப்போது பல நாடுகளில் குறிப்பிடத்தக்க உயர் இடங்களில் கறுப்பினத்தவர்கள் அங்கம் வகித்து வந்தாலும் இன்றும் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நீதி அனைவருக்கும் சமமானது என உலகம் முழுவதும் பதிக்கப்பட்டாலும், அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் கறுப்பினம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக எவ்வாறு நீதி பிரயோகிக்கப்படுகிறது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணம்.

என்னால் மூச்சு விட முடியவிலலை என்ற அந்த மனிதனது குரல் இன்று உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க அந்த குரலை பிரதிபலித்துக்கொண்டிருக்கும், சிறுபான்மையினர், சமூக மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் பெரும்பான்மை வெள்ளை இனத்தவர்களின் பதிலை தாங்க முடியாமல் அமெரிக்க அரசாங்கமே ஸ்தம்பிக்கிறது.

உன்மையில் அங்கு என்னதான் நடந்தது?

அமரிக்காவின் மிக முக்கியமான மாகாணங்களில் ஒன்றான மினொசெட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில் உள்ள ஓர் கடைக்கு வழக்கம் போலவே சில்லறை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற ஜோர்ஜ் பிலோய்ட்க்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது தனது கடைசி பயணமும் நாளும் என்று.

அந்த கடை ஜோர்ஜ் பிலோய்ட்க்கு மிகவும் பழக்கமான கடைதான். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த கடைக்கு சொந்தக்காரரும் ஜோர்ஜ் பிலோய்ட்க்கு மிகவும் தெரிந்தவருமான நபர் அன்று கடையில் இல்லை அதற்கு பதிலாக கடையில் பணியில் இருந்த ஊழியரிடம் 20 டொலர்களை கொடுத்து புகை பொருட்கள் வாங்கிக்கொண்டு நடக்கிறார் ஜோர்ஜ் பிலோய்ட்.

ஆனால் கடைக்கார ஊழியனுக்கு ஜோர்ஜ் பிலோய்ட் வழங்கிய நாணயத்தாளின் மீது அவநம்பிக்கை ஏற்பட உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு அமெரிக்க பொலிஸார் விரைகின்றனர். இவை எதுவேமே தெரியாமல் தனக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு காரில் ஏறி பயணிக்க தயாராக இருந்த ஜோர்ஜ் பிலோய்ட் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்படுகிறார்.

இறங்குமாறு பணிக்கப்பட்டு இதுவரை காரணம் ஏன் என்று தெரியாமல் துப்பாக்கி முனைகளில் அவர் கீழிறக்கப்படுகிறார்.

உண்மையிலேயே ஜோர்ஜ் பிலோய்ட் மிக திடகாத்திரமான ஒரு மனிதர். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சியின் மூலம் தன்னை மெருகேற்றி வைத்திருந்த ஜோர்ஜ் பிலோய்ட் கடந்த சில ஆண்டுகளாக களியாட்ட விடுதிகள் மற்றும் தனியார் நிகழ்வுகளில் பெளன்சர் என சொல்லப்படும் காவல் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியவர்.

பாதுகாப்புகள் பற்றியும் விசாரணைகள் பற்றியும் ஓர் சந்தேக நபரை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் ஜோர்ஜ் பிலோய்ட்க்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தமையாலோ என்னவோ தனது இறப்பு வரை ஜோர்ஜ் பிலோய்ட் எந்த இடத்திலும் அத்துமீறியதாகவோ அல்லது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவோ எந்த இடத்திலும் பதிவுகள் இல்லை.

இந்நிலையில், பொலிஸாருக்கு மிக இணக்கமாகவே நாடந்துகொண்ட ஜோர்ஜ் பிலோய்ட்டை அமெரிக்க பொலிஸ் நம்பவில்லை எனும் காரணத்தினால் மிகப்பாரிய ஒரு குற்றவாளியைப்போல்  நடத்துகின்றனர்.

மினியாபொலிஸ் நகர வீதியில் ஜோர்ஜ் பிலோய்ட்டின் முகம் அழுந்த பதியுமாறு அவர் நிலத்தில் கிடத்தப்பட்டு அமெரிக்க பொலிஸார் ஒருவரின் முழங்கால்கள் அவரது கழுத்தில் பதியும்படியாக அழுத்தப்படுகிறது.

இந்த நிலை ஏறக்குறைய 8.46 நிமிடங்கள் தொடர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. ஆனாலும் ஏறக்குறைய 6 நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

என்னால் சுவாசிக்க முடியவில்லை. என்னை விடுங்கள் என அவர் அணுக்கமான குரலில் யாசிக்க வார்த்தைகள் தான் இன்று உலகெங்கும், குறிப்பாக அமெரிக்காவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் விடுதலை வார்த்தைகளாகியிருக்கின்றன.

எங்களால் முடியவில்லை எங்களை விட்டுவிடுங்கள் என்பது ஏறக்குறைய உலகின் அனைத்துப் பக்கங்களிலும் இருக்கும் சிறுபான்மையினரால் காலம் காலமாக உச்சரிக்கப்படும் வார்த்தைகள்தான்.

இந்த இறப்பு தனிப்பட்ட ரீதியில் ஜோர்ஜ் பிலோய்ட்டின் குடும்பத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. நேற்று முன்தினம் அமெரிக்காவில் பிரத்தியேகமாக செய்தியாளர்களை சந்தித்துள்ள ஜோர்ஜ் பிலோய்ட்டின் மக்களின் தாயார் எனது மக்களுக்கு அப்பா இல்லை, அவளது வளர்ச்சியில் அவர் இனிமேல் பங்கெடுக்கப்போவதில்லை. அவளின் கல்வி அவளின் பட்டமளிப்புகளை அவர் பார்க்கப்போவதில்லை. எனது மக்களோடு கூட சேர்ந்து அவர் நடக்கப்போவதில்லை என கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

இதை போல ஒன்றல்ல இரண்டல்ல உலகளாவிய ரீதியில் அடக்குமுறைகளால் மரணிக்கும் ஓராயிரம் ஜோர்ஜ் பிலோய்ட்கள். அத்தனை பெருக்குமான நீதிக்கான குரல்கள் இன்று அமெரிக்காவில் ஒலித்துக்கொண்டிருக்கிறன.

வரலாற்றில் மிக அரிதாக அமெரிக்காவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெள்ளை மாளிகையினை அச்சம் சூழ்ந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் ஜனாதிபதி தன்னுடைய குடும்பத்தினருடன் ஒரு மணி நேரம் இரகசிய அறைக்குள் முடங்கியிருக்கிறார்.

இத்தனையும் செய்த, இன்னும் எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவால் இன்னும் போராட்டாக்காரர்கள் விரும்பும் நீதியினை வழங்க முடியவில்லை என்பதுதான் ஏன் இத்தனை பெரிய போராட்டம் என்பதற்கான பதில்.