கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை
கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
பூநகரி பிரதேச சபையின் சமத்துவ கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஞானம் ரதிகரன் மற்றும் அந்தக் கட்சியின் முழங்காவில் பிரதேச அமைப்பாளர் குவேந்திரன் ஆகியோரின் பெயரில் கிளிநொச்சி தலைமை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியால் இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20 ஆம் திகதி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.
நீநிமன்றினால் வழங்கப்பட்ட இந்த் தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிடட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில், மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோரின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த நிலையில் சட்டவாளர்களின் சமர்ப்பணங்களை அவதானித்த நீதிபதி, வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை எதிர்வுரும் 25ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை குறித்த பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது.
குறித்த பிரேரணை சட்டத்தரணிகள் ஊடாக இன்று நீதமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பிரேரணை குறித்த பரிசீலனை நாளைய தினம் இடம்பெறும் என கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம் திகதியிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நிதிமன்ற நீதிபதி இன்றைய தினம் நீதமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாத நிலையில் குறித்த பிரேணை மீதான பரிசீலனை நாளைய தினத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் 17 பேருக்கு இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு விடயங்களை உள்ளடக்கி காவல்முறையினரால் வழக்கு தொடரப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் அடங்கலாக 17 பேருக்கு மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தனர்.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் நீதவான் எம். கணேசராஜா குறித்த தடை உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நாளைய தினம் அராயவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நினைவேந்தல் நிகழ்வினை எதிர்வரும் 27 ஆம் திகதி வீடுகளில் இருந்தவாறே அனுஷ்டிக்குமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் நாளுக்கு நாள் நாட்டில் முடிவுகள் மாறிக்கொண்டு வருவதன் காரணமாக நாளை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்திற்கு அமைய பொது மக்கள் செயற்படும் படி தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா குறிப்பிட்டுள்ளார்.