ஒன்பது வயதுச் சிறுவனின் விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்

ஒன்பது வயதுச் சிறுவனின் விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்

புத்தளம் - புதிய எலுவன்குளம் பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(21) உயிரிழந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த முஹம்மது அர்ஷான் முஹம்மது அம்மார்(09) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், உயிரிழந்த சிறுவன் மதிய உணவு உட்கொண்ட பின்னர் விளையாடுவதற்காக வெளியே வந்துள்ளார்.

சிறுவனின் தாய் தனது இரண்டாவது மகனுக்கு மதிய நேர உணவைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தனது மூத்த மகன் வீட்டு வளவுக்குள் உள்ள கொய்யா மரத்தில் விளையாட்டுக்காக கட்டப்பட்டிருந்த செய்லன் பட்டையில் கழுத்து இறுகி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாயின் அழுகுரலைக் கேட்ட அயலவர்கள் அங்கு வருகை தந்து, மரத்தில் தொங்கிய குறித்த சிறுவனை உடனடியாக மீட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.